இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. துபாய், அபுதாபி, ஷார்ஜா மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டம் அக்டோபர் 15ல் முடிவுக்கு வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே அனைத்து வீரர்களும் அமீரகம் சென்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் வரும் சனிக்கிழமை துபாயில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் அனைத்து ஆட்டங்களையும் மைதானத்திற்கு வந்து ரசிகர்கள் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ள ரசிகர்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையதளத்திலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் அமீரகம் மற்றும் ஓமனில் உலகக் கோப்பை டி20 நடைபெற இருப்பதால் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது வீரர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.