துபாயில் அதிக சம்பளம் என்று கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துபாயில் திரைப்படத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட பல பெண்கள் அங்கு மதுபான விடுதிகளில் ஆபாச நடனமாடவும் பாலியல் தொழிலில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்து, 7 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளது.
இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி இதுவரை 95 பெண்களை இந்தக் கும்பல் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளதாக பெங்களுரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
துபாய் சென்றதும் அந்தப் பெண்கள் மது விடுதிகளில் ஆபாச நடனம் ஆடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டும் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மைசூரு, சேலம், சென்னை, புதுவை, திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் கைதாகி உள்னர்.
கைதான அனைவருமே திரைத்துறையில் வேலை பார்த்து வருபவர்கள் என்றும் துணை நடிகர்களுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
துபாயில் சிக்கி உள்ள 95 பெண்களையும் மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.