புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தாண்டு 10 லட்சம் பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பயணத்திற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்த நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020 ஆம் ஆண்டு 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. அது போல் கடந்த ஆண்டு 60 ஆயிரம் பயணிகளுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.