துபாய் EXPO 2020 கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
முன்னதாக தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த விழாவில் அமீரகத்தின் மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் அமீரக அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிகையில், “உலகத் தரத்திலான இந்த கண்காட்சியை நடத்தி வரும் துபாய் அரசுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இந்நாட்டின் தரத்துக்கும், திறத்துக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே சான்று. இந்த கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு வாரத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகை பொருட்களும் இந்த அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, மருத்துவம், கலை, பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழிற் பூங்காக்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்” என்றார்.