உக்ரைன் மக்கள் அமீரகத்திற்கு விசா இல்லாமல் வரத்தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விசா இன்றி வரலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகத்தின் தூதரக ஆலோசனை பிரிவின் உதவிச் செயலாளர் ஃபைசல் லுட்பி கூறுகையில், “கடந்த புதன்கிழமை இரவு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகம் உக்ரைன் மக்கள் வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி அங்கு வசிக்கும் உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்திற்கு வருவதற்கு விசா தேவையில்லை. நேரடியாக பாஸ்போர்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக அமீரகத்தில் உள்ள உக்ரைன் நாட்டு தூதரகத்தின் ஒத்துழைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் சேவைகளை வழங்க அமீரகம் தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக உக்ரைன் நாட்டுக்கு அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.